விநாயகர் அகவல் ஔவையார் அருளிச்செய்த நூல்களுக்குள் சிறந்த சுருக்கமான பக்தி மிகுந்த யோக சாஸ்திர ரஹசியங்கள் நிறைந்த ஒரு பாடலாகும்.
முழுமுதற்கடவுளான விநாயகரை இறைவனாகவும் குருவாகவும் பணிந்தேத்தி வழிபட்டு அவர் திருவருளால் ஐந்தெழுத்தும் யோகமும் உபதேசிக்கப்பெற்று அதன் மூலம் பிரம்ம ஞானத்தையும் முக்தியையும் அடைந்த அனுபவத்தில் திளைத்து அவர் கண்ட கணநாதனையும் பயின்ற யோகத்தையும் சாரமான வார்த்தைகளினால் வர்ணிக்கிறார் ஔவையார்.
அவர் அடைந்த பேற்றை நாம் எல்லோரும் உணரும் வகையில் நமக்கொரு சிறந்த வழிகாட்டியாக இந்நூலை நமக்காக அருளியுள்ளார்.
அகவல் என்பது மயிலின் ஓசையை ஒத்த ஒலியோடும் நயத்தோடும் பாடப்படும் பாடல். மயில் மழை மேகங்களைக் கண்டும் மழை பெய்யும் போதும் மகிழ்ந்து அகவும். அதே போல் இறை அருளின் அமுதத்தில் நனைந்து அந்த பேரின்பத்தை அனுபவித்து அதை நாமும் உணரும் வண்ணம் உலகறிய மயில் போல் ஆனந்தத்தால் மகிழ்ந்து பாடியுள்ளார். தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பார் போல் நாமும் உய்ய யோக நெறியும் இறை வழியும் காட்டி அருளியுள்ளார்.
இந்நூலில் அந்த அகவல் கணபதி ஸஹஸ்ரநாமம் முதலிய காணாபத்திய சாஸ்திரங்களின் உதவியோடும் வேதாந்த சாஸ்திர யோக சாஸ்திரங்களின் உதவியோடும் எளிய தமிழில் விளக்க உரை செய்யப்பட்டுள்ளது. ஆகாங்கே அவர் கூறும் பெயருடைய கணபதிகளின் தியானங்களும் தரப்பட்டுள்ளன.